மலேசியா வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு நாடாக உருவாகும் இலக்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில், MY-AI Standards அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
இந்த தரநிலை தளமானது, நாட்டின் இலக்கவியல் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாகவும், நம்பகமான AI வளர்ச்சிக்கான நடைமுறை கட்டமைப்பாகவும் அமையும் என்று அவர் கூறினார்.
இந்த தளம் “வடிவமைப்பிலேயே நம்பிக்கை” அணுகுமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களானது, தெளிவான, வெளிப்படையான மற்றும் கணக்காய்வு செய்யக்கூடிய தரநிலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.
அதேவேளை, டீப்ஃபேக், டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் AI மூலம் உருவாகும் தவறான தகவல்கள் போன்ற அபாயங்களை எதிர்கொள்ள நம்பகமான தரநிலைகள் மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிப்படைத்தன்மை, தடமறிதல் மற்றும் பொறுப்புணர்வு ஆகிய அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் AI தொடர்பான மோசடி மற்றும் இணைய குற்றங்களை எதிர்கொள்ளவும் இது துணைநிற்கும் என்று கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.








