நாளை நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என அதன் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அசைக்க முடியாத நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை, பாரோய் ஜெயா பள்ளிவாசலில் தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், எத்தனை இடங்களைக் கைப்பற்றுவோம் என்ற எண்ணிக்கையைத் தம்மால் துல்லியமாகக் கூற முடியாது என்றும், அதனை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனிடம் தான் கேட்க வேண்டும் என்றும் புன்னகையுடன் குறிப்பிட்டார்.
எனினும், தங்களின் முழு பலத்தையும் கொண்டு பிரச்சாரம் செய்துள்ளதால் வெற்றி நிச்சயம் என அவர் கூறினார். தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தன்மையை நிலைநிறுத்துவதே தங்களின் முதல் முன்னுரிமை என்றும், அதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நாளை நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில், நெகிரி செம்பிலானின் புதிய ஆட்சியைத் தீர்மானிக்க 8 லட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவுள்ளனர்.








