கோலாலம்பூர், ஏப்ரல்.05-
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, கட்சிக்கு உள்ளிருந்தே பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகக் கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு மாநில பிகேஆர் துணைத் தலைவர் உமரெசன் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார். பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி ஒரு 'கபடதாரி' என்று சாடியுள்ள பத்து உபான் உறுப்பினர் குமரேசன், கட்சியின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில் அமைதி காத்த ரஃபிஸி, தற்போது பதவியில் இல்லாத போது மட்டும் Podcast போன்ற தளங்களில் கட்சிக்கு எதிராகப் பேசுவது ஏன் என்றும் குமரேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ரஃபிஸ்யின் அலுவலக அதிகாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 1.12 பில்லியன் ரிங்கிட் ARM முதலீட்டு ஊழல் புகாரிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே அவர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் குமரேசன் குற்றம் சாட்டியுள்ளார்.








