கோத்தா கினபாலு, நவம்பர்.15-
எதிர்வரும் 17-ஆவது சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அதிகப்படியான பாதுகாப்பு தேவைப்படும், 15 முக்கிய இடங்களை, அரச மலேசிய போலீஸ் படையான பிடிஆர்எம் அடையாளம் கண்டுள்ளது.
அரசியல் பிரச்சினைகள், அரசு சாரா இயக்கங்களின் தலையீடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அவ்விடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை சபாவிற்கு மட்டுமல்ல என்று கூறியுள்ள காலிட், தேர்தல்கள் நெருங்கி வருவதால் தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற சூழ்நிலைகள் உருவாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சபா மாநிலத்திலுள்ள 73 தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் வகையில், பாதுகாப்புப் பணிகளுக்காக 9,300 அதிகாரிகள் அமர்த்தப்படுவார்கள் என்று இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த காலிட் தெரிவித்தார்.
இன்று மாநிலம் முழுவதும் 25 மையங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருவதால், அங்கு 4,300 அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் காலிட் குறிப்பிட்டார்.








