Mar 4, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க ஒரு 'பெரிய கூட்டணி': ஸாஹிட் ஹமிடி திட்டம்
அரசியல்

அனைத்து மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க ஒரு 'பெரிய கூட்டணி': ஸாஹிட் ஹமிடி திட்டம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

நாட்டில் உள்ள அனைத்து மலாய்-முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதற்காக ஒரு "பெரிய கூட்டணி"யை உருவாக்க அம்னோ விரும்புவதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று அறிவித்தார்.

மலாய் சமூகம் மற்றும் இஸ்லாத்தின் நலனுக்காக, அரசியல் கட்சி வேறுபாடுகளைக் களைந்து மலாய் கட்சிகளிடையே ஒரு பெரிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். மலாய் கட்சிகள் தொடர்ந்து தங்களுக்குள் மோதிக் கொள்வதால் நாட்டிற்கு இழப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இன்று கோலாலம்பூர், உலக வாணிப மையத்தில் அம்னோ பொதுப் பேரவையை நிறைவு செய்து வைத்து உரையாற்றுகையில் துணைப்பிரதமருமான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.

இந்த மெகா கூட்டணியில் இணையும் மலாய்க் கட்சிகள் தங்கள் கட்சிகளைக் கலைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஒரு பெரிய கட்டமைப்பின் கீழ் முறை சாரா முறையில் இணைந்து செயல்படலாம் என்று அவர் விளக்கினார்.

இந்த புதிய முயற்சி தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கை அல்ல என்பதையும் ஸாஹிட் உறுதிப்படுத்தினார். அம்னோ தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அவர் உறுதியளித்தார்.

சிதறிக் கிடக்கும் மலாய் வாக்குகளை ஒருங்கிணைக்கவும், பிளவுபட்டுள்ள மலாய் கட்சிகளை இணைக்கும் ஒரு பாலமாகவும் அம்னோ செயல்படும் என்று அவர் கூறினார்.

ஸாஹிட்டின் இந்த அறிவிப்பை மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.

Related News