கோலாலம்பூர், நவ. 23-
அண்மையில் ஐந்து நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்திற்கான செலவினம் குறித்து குறைகூறி வருகின்ற நபர்கள், அரைப்பைத்தியங்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது ஒரு தூய்மையான நெறிமுறை வகுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டதில், என்ன குறை காண வேண்டியுள்ளது என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் வினவினார்.
தம்முடன் இந்த வெளிநாட்டுப் பயணத்தில் பங்கு கொள்ளவிரும்பும் நிறுவனங்கள், அதற்கான செலவினத்தை தாங்கள் சொந்தமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கம் வகுத்திருந்த அந்த நெறிமுறையாகும் என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.
மலேசியாவிற்கு முதலீட்டை கவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணங்கள் யாவும் மலேசிய நிறுவனங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடிய பயணங்களாகும். எனவே புரோட்டோன், பெட்ரோனாஸ், யின்சோன், சப்புரா எனர்ஜி, டோப் குளோவ் மற்றும் செமிகொண்டாக்டர் தொழில்துறையிர் உள்ளிட்ட நிறுவனங்கள் தமது வெளிநாட்டுப்பயணத்தில் பங்கு கொண்டதாக பிரதமர் விளக்கினார்.
தங்கள் பயணத்திற்கான அனைத்து செலவினத்தையும் அந்ததந்த நிறுவனங்கள், சொந்தமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்த பயணத்தின் முக்கிய நிபந்தனையாகும்.
இவ்வாறு செய்வது குற்றமா? அல்லது இதில் என்ன தவற்றை கண்டு பிடித்து விட்டார்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் வளங்களை திருடியவர்களையும், கொள்ளையடித்தவர்களையும் நாம் பூஜிக்கிறோம், துதிப்பாடுகிறோம். ஆனால், நேர்மையான வழியைப் பின்பற்றி, நடப்பவர்களை தூற்றுகிறோம், கடுமையாக விமர்சிக்கிறோம். இப்படிபட்டவர்கள், அரைப்பைத்தியங்கள் ஆவர் என்று பிரதமர் வர்ணித்தார்.
பிரதமர் 5 நாடுகளுக்கான பயணத்திற்கு மொத்த செலவினம் 61 லட்சத்து 62 ஆயிரம் வெள்ளியாகும். ஆனால், அந்த தொகையில் 16 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி அல்லது 27 விழுக்காட்டுத்தொகையை மட்டுமே அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
எஞ்சியத் தொகையான 45 லட்சம் வெள்ளியை அதாவது 73 விழுக்காட்டுத் தொகையை இப்பயணத்தில் பங்கு கொண்ட ஆதரவு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக நேற்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் விளக்கம் அளித்து இருந்தார்.








