மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் சேவை ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என வெளியாகி வரும் தகவல்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது குறித்து நான் எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை; ஏற்கனவே கூறியது போல இந்த விவகாரத்திற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை" என அசாம் பாக்கி சுருக்கமாகக் கூறினார்.
அசாம் பாக்கியின் ஒப்பந்தம் வரும் மே 12-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில், சிங்கப்பூர் செய்தி நிறுவனம் மற்றும் புளூம்பெர்க் ஊடகம் ஆகியவை, அசாம் பாக்கியின் பங்கு வர்த்தக சர்ச்சைகள் காரணமாக அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








