இந்த நாட்டில் மலாய்க்கார சமூகம் பிளவுப்பட்டதற்கு தாம்தான் காரணம் என்று கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று வன்மையாக மறுத்தார்.
மலாய் சமூகத்தின் அரசியல் வீழ்ச்சிக்கும் பிரிவினைக்கும் தாம் காரணமல்ல. மாறாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தலைமையிலான அம்னோ தனது உண்மையான கொள்கையிலிருந்து விலகி, செல்வத்தைச் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டதால்தான் மலாய்க்காரர்கள் மத்தியில் இந்த பிளவுகளும், பிரிவினையும் ஏற்பட்டதாக துன் மகாதீர் குற்றம் சாட்டினார்.
அம்னோவிற்கு மாற்றாக ஒரு வலுவான மலாய் கட்சியை உருவாக்கவே தாம் 'பெர்சத்து' கட்சியைத் தொடங்கியதாக துன் மகாதீர் விளக்கமளித்தார்.
எனினும், 14-வது பொதுத்தேர்தலில் பெர்சத்து 13 இடங்களை மட்டுமே வென்றதாலும், மக்கள் தொடர்ந்து அம்னோவை ஆதரித்ததாலும் இந்தப் பிளவு நீடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, அமானா கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஹஸ்பி மூடா கூறுகையில் துன் மகாதீர் பல உதிரிக் கட்சிகளை உருவாக்கி மலாய் வாக்குகளைப் பிரிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பதிலடியாகவே மகாதீரின் இந்த முகநூல் பதிவு அமைந்துள்ளது.
தாம் எப்போதும் மலாய் இனத்தின் நலனுக்காகவே பாடுபடுவதாகவும், தற்போதைய அரசியல் சூழலுக்குத் தவறான தலைமைகளே காரணம் என்றும் துன் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.








