கோலாலம்பூர், ஜனவரி.05-
பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகள் அல்லது இரண்டு தவணைகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பை ஜசெக.வின் இரண்டு முன்னணித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
பிரதமரின் இந்தத் திட்டம், ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் நிர்வாகத்தில் கூடுதல் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிச் செய்வதற்கும் எடுக்கப்பட்ட மிக முக்கியமான நிறுவனச் சீர்திருத்த நடவடிக்கையாகும் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் ஏற்கனவே 2018-ஆம் ஆண்டில் முதலமைச்சர் பதவிக் காலத்தை இரண்டு தவணைகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதை சோவ் கோன் யோவ் இதனுடன் ஒப்பிட்டுக் காட்டினார்.
ஜசெக.வின் துணைத் தலைவர் ங்கா கோர் மிங் கருத்துரைக்கையில் பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ள இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள், நாட்டின் நிர்வாகத்தில் வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையை ஏற்படுத்தும் என்று வரவேற்றுள்ளார்.
2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜசெக தேசிய பேராளர் மாநாட்டின் போது, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்தையும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் சுட்டிக் காட்டினார்.








