மலேசிய ஊடகத்துறையில் ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ கொள்கையை அமல்படுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மலேசிய ஊடகக் கவுன்சிலுக்கு தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகப் பணியாளர்களின் நலனை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அமைச்சர் ஃபஹ்மி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்களின் கருத்துகளும் சேகரிக்கப்பட உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைக் கையாள, இந்த ஆக்கப்பூர்வமான முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துள்ளார் என்பதை டத்தோ ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.
வரும் ஏப்ரல் 15 முதல், 8 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் பயன்பாட்டை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஊடக நிறுவனங்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்ட பிறகு, இது குறித்த இறுதி அறிக்கை அமைச்சரவைக்குத் தாக்கல் செய்யப்படும் என்று டத்தோ ஃபஹ்மி விளக்கினார்.








