பாயான் லெப்பாஸ், நவ. 18-
பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்தின் ஏற்பாட்டில் பாயான் லெப்பாஸ், மசூரி 5 பொயிண்ட் புளோக், பாயான்பாரு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுடான சந்திப்பு, கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் டத்தோஸ்ரீ சுந்தராஜுவுடன் பாயான் லெப்பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி ஸின், ஹுன்ஸா குழுமத்தின் தோற்றுநர் டத்தோஸ்ரீ கோர் தெங் தோங், பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்தின் வர்த்தக தலைமை அதிகாரி ஹாஜி பாக்ஹுராஸி இப்னு ஒமார் , மற்றும் பினாங்கு வீடமைப்பு வாரியத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாராட் டாயா, முகிம் 12, ஜாலான் செடியா அடா, லாட் எண். 2319 முதல் 2325 வரையில் வீற்றிருக்கும் 6.70 ஏக்கர் நிலப்பரப்பளவைக் கொண்ட பகுதியில் அமைந்துள்ள மசூரி அடுக்குமாடிப்பகுதியில், PSP எனப்படும் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் நடைபெறக்கூடிய வீடமைப்புத் திட்டத்தின் பின்னணி, அதன் பலாபலன்கள் பற்றிய தகவல்களை மசூரி 5 பொயிண்ட் புளோக் குடியிருப்பாளக்ளுக்கு விளக்குவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

இந்த விளக்கமளிப்புக்கூட்டத்தில் 153 வீட்டு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநிலத்தின் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் என்பது பழைய மற்றும் பொருளாதார ரீதியாக பயனற்ற குடியிருப்புகளைக் கொண்ட பகுதிகளை அகற்றி, மக்களுக்கு தரமான மற்றும் செளகரியமான வீட்டு வசதிகளை ஏற்படுத்திதரக்கூடிய அபிவிருத்தி மற்றும் மறுமேம்பாட்டிற்கு உதவக்கூடிய ஒரு திட்டமாகும்.
ஒரு நகரத்திற்கு உருமாற்றமும், வடிவமைப்பும் ஏற்படுத்தி, நகர்ப்புற சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு விளக்கினார்.

இந்த நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம், பினாங்கு மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் முதலாவது திட்டமாகும். நகர்ப்புற உருமாற்றத்திற்கு உந்துதல் அளிப்பதற்கு பினாங்கு மாநில அரசு மேற்கெண்டு வரும் முயற்சிகளில் இது ஒரு வரலாற்றுப்பூர்வ சாதனையை குறிக்கிறது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
இந்த முயற்சியானது, நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் பினாங்கு அரசின் நீண்ட கால திட்டமிடல் மற்றும் உறுதிப்பாட்டின் விளைவாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது உரையில் தெரிவித்தார்.








