நாளை நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில், பாலோ சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் ரூபன் ஆறுமுகம் தமது இறுதிதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதி மக்களுக்கு அதிரடி உறுதியளித்துள்ளார்.
தொகுதி மக்கள் தம்மைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்தால், பாலோ மக்களின் சமூக நலன் சார்ந்த விவகாரங்களில் தமக்கு முதல் முன்னுரிமை இருக்கும் என்று டாக்டர் ரூபன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பி40 குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களின் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், உள்ளூர் இளையோருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட டாக்டர் ரூபன், ஜோகூரில் ஓர் ஊழலற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சி மலர்வதற்குத் தமது பங்களிப்பு மிக வலுவாக இருக்கும் என்று ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
பாலோ தொகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அடிமட்ட மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்கவும் தமக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என டாக்டர் ரூபன் ஆறுமுகம் தொகுதி மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்








