நாளை நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில் சுமார் 70 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் ராம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார். பிரச்சாரக் காலத்தில் பொதுமக்களிடையே காணப்பட்ட ஆர்வம் மற்றும் தேர்தல் செயல்முறையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக 2022-இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 54.9 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் தேர்தலில் சுமார் 2.7 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, இருப்பிடங்களைப் பொறுத்து வெவ்வேறு நேரங்களில் நிறைவடையும். பெரும்பாலான வாக்குச்சாவடிகள் மாலை 6 மணிக்கு மூடப்படும் வேளையில், சில தீவுப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் காலை 11 மணி, மதியம் 12 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 4 மணி என முன்னதாகவே மூடப்படும்.
இத்தேர்தல் பணிகளை மேற்பார்வையிட 43,036 தேர்தல் பணியாளர்கள் திரட்டப்பட்டுள்ளனர். மேலும், தீவுப் பகுதிகளில் இருந்து வாக்குப்பெட்டிகளைக் கொண்டு வருவது உள்ளிட்ட தளவாட ஏற்பாடுகள் போலீஸ் மற்றும் ஆயுதப் படையினரின் ஒத்துழைப்புடன் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.








