Apr 19, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிசில் ஐவர் கொண்ட ஆட்சிக் குழுவை அமைக்கிறார் புதிய மந்திரி பெசார் அபு பாக்கார்
அரசியல்

பெர்லிசில் ஐவர் கொண்ட ஆட்சிக் குழுவை அமைக்கிறார் புதிய மந்திரி பெசார் அபு பாக்கார்

Share:

கங்கார், டிசம்பர்.31-

பெர்லிஸ் மாநிலத்தில் 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சிக் குழுவை அமைக்கப் போவதாக அம்மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா அறிவித்துள்ளார்.

அபு பாக்கார் தலைமையிலான ஆட்சிக் குழுவில் இடம் பெற மாட்டோம் என பாஸ் கட்சி சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸ் அரசியலமைப்பின் படி, ஆட்சிக் குழுவை அமைப்பதற்கு, மந்திரி பெசாரைத் தவிர்த்து, 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதுமானது.

அதன்படி, பெர்சாத்து கட்சியில் ஆட்சிக் குழுவை அமைக்கப் போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனங்களானது இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புதிய அணியில், உறுப்பினர் பதவியிலிருந்து பாஸ் கட்சி நீக்கம் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெறவுள்ளதாகத் தெரிகின்றது.

அவர்கள் மூவரும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களாக தங்களது தொகுதிகளைத் தக்க வைக்கும் பட்சத்தில், அவர்களும் தமது அணியில் இடம் பெறுவார்கள் என்றும் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், காலியான பிந்தோங், குவார் சஞ்சி மற்றும் சூப்பிங் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பதை அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவுள்ளது.

Related News