கோலாலம்பூர், பிப்ரவரி.20-
பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், பொதுமக்களிடமிருந்து வரும் விமர்சனங்களை பிகேஆர் கட்சி உறுப்பினர்களும், அதன் தலைவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை தேசிய நலனுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் உட்பூசல்கள் விரிவடைவதைத் தடுப்பதற்காக, விமர்சனங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் பிம்பத்தையும் நற்பெயரையும் கெடுக்கும் நோக்கத்துடன் இது போன்ற விவகாரங்கள் எழுப்பப்படவில்லை என்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் நஸ்மி விவரித்துள்ளார்.
மேலும், நாட்டின் உயர்மட்ட நீதிபதிகளை நியமிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து, கடந்த ஆண்டு, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி மற்றும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் ஆகியோருடன் இணைந்து கவலைகளை வெளிப்படுத்தியதையும் நிக் நஸ்மி நினைவு கூர்ந்தார்.
அவ்வாறு வெளிப்படுத்துவதன் மூலம், தாங்கள் மூவரும் அரசாங்கத்தின் மீதான சரிபார்ப்பு மற்றும் சமநிலையில் தங்கள் பங்களிப்பை நிறைவேற்றுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.








