லஞ்ச ஊழல் வழக்கில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட ஜாஹிட் ஹமிடிக்கு வழங்கப்பட்ட DNAA எனப்படும் வழக்கிலிருந்து 'விடுவிப்பு' முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தாக்கல் செய்த மேல்முறையீடு தொடரலாம் என புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி சட்டத்துறை தலைவர் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனையை அப்பீல் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் இன்னும் தீர்க்கப்படாத முக்கிய சட்ட அம்சங்கள் இருப்பதாகவும், இது பொதுநலன் சார்ந்த விவகாரம் என்றும் நீதிபதி ஃபைசா ஜமாலுதீன், தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்தது.
ஜாஹிட் ஹமிடிக்கு வழங்கப்பட்ட 'விடுதலை அல்லாத விடுவிப்பு' மற்றும் அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட 'மேல்நடவடிக்கை இல்லை' என்ற முடிவுகள் தனித்தனி விவகாரங்கள் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, இந்த வழக்கின் முழுமையான விசாரணை இன்று பிற்பகல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








