பேரா மாநிலத் தொடர்புக் குழுவின் 80 ஆவது ஆண்டுப் பேராளர் மாநாடு நேற்று இங்குள்ள மாநாட்டில் மண்டபத்தில் நடைபெற்றது.
ம.இ.கா. தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ். விக்னேஸ்வரன் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அரசாங்கத்தில் பதவி இல்லாத தற்போதைய சூழ்நிலையிலும், இந்திய சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக ம.இ.கா. தொடர்ந்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ம.இ.கா. என்பது பதவி மற்றும் அதிகாரத்தை நம்பிச் செயல்படும் கட்சி அல்ல என்றும், இந்திய சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்காகப் பணியாற்றுவது அதன் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் மற்றும் இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கட்சியின் அடிமட்டப் பணிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ம.இ.கா. எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அனைத்து மட்டத்திலான தேர்தல் இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கட்சி தலைமை வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, பொதுத்தேர்தல் இந்த ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ நடைபெறலாம் என்பதால், தேர்தல் அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் ம.இ.கா.வின் அனைத்து தொகுதிகளும் கிளைகளும் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்ரும் சரவணன் வலியுறுத்தினார்.

மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பேராக் மாநில மஇகா தலைவர் டான் ஸ்ரீ எம். ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசாங்கத்தில் பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதனைப் பொருட்படுத்தாமல், இந்திய சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவதே ம.இ.கா.வின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.
அதேவேளையில், அடுத்து வரும் தேர்தலில் மஇகா வலிமையுடன் களத்தில் இறங்கும் என்றும் ராமசாமி உறுதியளித்தார்.








