கோலா நெருஸ், ஏப்ரல்.05-
பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின், தாம் விரைவில் இணையவுள்ள புதிய அரசியல் தளம், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஏற்கனவே அங்கத்துவம் பெற்றுள்ள ஒரு கட்சியாகவே இருக்கும் என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். கோலா நெருஸில் நடைபெற்ற சமய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தாம் ஒரு புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக நிலவும் யூகங்களுக்குப் பதிலளிக்கையில், ஏற்கனவே கூட்டணியில் உள்ள ஒரு கட்சியில் இணைவதில் தவறில்லை என்றும், அதுவே தனது புதிய வீடாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இன்னும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆணைப்படியே நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட அரசியல் வாழ்வைத் தாண்டி, மலாய் சமூகத்திற்கான நீதியான தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதே தமது முக்கிய நோக்கம் என்று வலியுறுத்தினார்.








