கோலாலம்பூர், அக்டோபர்.14-
கட்சியின் நடத்தை விதிகளை மீறியதற்காக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைஃபுல் வான் ஜான் உட்பட 5 தலைவர்களை பெர்சாத்து கட்சி பதவி நீக்கம் செய்துள்ளது.
மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் தனது உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதே வேளையில் ஹங் துவா ஜெயா பிரிவுத் தலைவர் முகமட் அஸ்ருடின் முஹமட் இட்ரிஸ், பெங்கெரான் பிரிவுத் தலைவர் முகமட் ஃபைஸால் அஸ்மார், ஈப்போ தீமோர் பிரிவுத் தலைவர் முகமட் ஃபாலி இஸ்மாயில் மற்றும் அம்பாங் பிரிவுத் தலைவர் முகமட் இசா முகமட் சைடி ஆகிய நால்வரும் தங்களது பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5 பேரும், அடுத்த 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் பெர்சாத்துவின் ஒழுங்குமுறை வாரியம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெர்சாத்து தெரிவித்துள்ளது.
மேலும், கட்சியின் நற்பெயரைப் பாதுகாக்க, அரசியலமைப்பு, நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகளைப் பின்பற்றுமாறு மற்ற உறுப்பினர்களையும் பெர்சாத்து வலியுறுத்தியுள்ளது.