கோலாலம்பூர், அக்டோபர்.13-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், மஇகாவிற்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள், பிரச்னை தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியுடன் தான் என்று மஇகா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தேசிய முன்னணியில் இருந்து விலகி மஇகா பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைவது குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஇகாவின் எதிர்காலம் குறித்து தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹமிடி எங்களுடன் பேசி வருவதாகக் கூறியுள்ளார்.
டத்தோ ஶ்ரீ ஸாஹிட்டின் இந்த கூற்று, உண்மையிலேயே எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. காரணம், டத்தோ ஶ்ரீ ஸாஹிட்டை நாங்கள் சந்தித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
அரை நூற்று ஆண்டுகளுக்கு மேலாக தேசிய முன்னணியுடன் ஓர் உறுப்புக் கட்சியாக மஇகா இருந்து வருகிறது. எங்களுக்கு எப்போதும் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருக்க வேண்டியது அந்த கூட்டணியின் பொறுப்பு மற்றும் கடமையாகும்.
ஆனால், பல கட்டங்களில் மஇகாவை தேசிய முன்னணி கழற்றி விட்டுள்ளது. கண்டும் காணாமல் இருந்துள்ளது. இது உண்மையிலேயே உறுப்புக் கட்சி என்ற முறையில் மஇகாவையும் அதன் உறுப்பினர்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இவ்விவகாரத்தில் மஇகா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.