வழிபாட்டுத் தலங்கள் குறித்த முந்தைய சொல்லாடலுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்க மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அவரை ஒரு "உண்மையான அரசியல் தலைவர்" என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் பாராட்டியுள்ளார்.
சிரம்பானில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கைகளைக் கூப்பி, உண்மையான மனதுடன் இந்த மன்னிப்பை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ராயர், இதனை ஏற்றுப் பழைய கசப்புகளை மறந்து இந்தியச் சமுதாயம் அவரை மன்னிக்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்தும் வேளையில், அன்வாரின் இந்தத் தாராள குணம் 'மடானி' அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இந்தியச் சமுதாயத்திற்காக மித்ரா நிதி ஒதுக்கீடு, ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு 76 மில்லியன் ரிங்கிட், டேஃப் கல்லூரிக்கு 20 மில்லியன் ரிங்கிட், முஸ்லிமல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பிற்கு 200 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு மற்றும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புகள் எனப் பிரதமர் அன்வார் செய்துள்ள எண்ணற்றச் சாதனைகளையும், அமைச்சரவையில் கோபிந்த் சிங் தியோ மற்றும் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் ஆகியோரின் பிரதிநிதித்துவத்தையும் ராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.








