வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமாகிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ராணுவம் மற்றும் போலீஸ் படையினருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராணுவத்தினர், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்த அன்வார், இன்னும் நிறைய மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதை தாம் அறிவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்டவை போதுமானது அல்ல என்பது தமக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் நம்பிக்கையை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளை ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுவாக்குப்பதிவானது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 16 ஆயிரத்து 884 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது துணையினர், அதேபோல் 5 ஆயிரத்து 455 போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது துணையினர் இந்த முன்கூட்டியே வாக்குப்பதிவில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








