பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.05-
மலேசிய இந்திய மக்கள் கட்சி - எம்ஐபிபி, அடுத்த பிரதமர் வேட்பாளராக பெர்சத்து தலைவர் முஹிடின் யாசினை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. முஹிடின் யாசினை 'அனைத்து இனத்தவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்' என்று வர்ணித்துள்ள எம்ஐபிபி தலைவர் பி. புனிதன், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குத் தங்கள் முழு ஆதரவும் உண்டு என்று தெரிவித்தார்.
“Abah எங்கள் தேர்வு. நாட்டில் அக்கறை, தூய்மை, நிலைத்தன்மை கொண்ட ஓர் அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம், அவரே மீண்டும் நாட்டை வழிநடத்த வேண்டும்," என்று, இன்று நடந்த எம்ஐபிபி கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் முழக்கமிட்டார். இக்கூட்டத்தில் அக்கட்சியின் 5 முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாக இந்த முடிவு ஒருமனதாகக் கட்சியின் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், மலேசிய இந்தியச் சமூகம் இனியும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும், தங்கள் சுயமரியாதையை எந்த அரசியல் கட்சியும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் புனிதன் ஆவேசமாக எச்சரித்தார்.