இந்தியச் சமுதாயத் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக 'ஸ்புமி' (SPUMI) திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ள தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் கீ கியோங்கிற்கு, நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன், தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மலேசியா மடானி கொள்கையின் கீழ் அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளடக்கிய நிதி உதவியை உறுதி செய்யும் அரசின் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை மெய்ப்பிப்பதாகக் குறிப்பிட்ட வீரப்பன், இந்த நிதியானது இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த குறு மற்றும் சிறு தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்த நிதி உதவி எந்தவொரு அதிகாரத்துவச் சிக்கல்களுமின்றி தகுதியுடையவர்களுக்கு விரைவாகச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில அளவில், இந்தியச் சமுதாயத்திற்கான தொழில்முனைவோர் திட்டங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதைத் தான் உறுதி செய்யப்போவதாக வீரப்பன் தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக, எதிர்வரும் ஹரி ராயா பெருநாளைத் தொடர்ந்து, மாநிலத்திலுள்ள இந்தியத் தொழில்முனைவோருக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் ஆதரவு குறித்த தெளிவான வழிகாட்டல்களை வழங்கச் சிறப்பு விளக்கக் கூட்டங்களை மாநில அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறினார். தகுதியுள்ள இந்தியத் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை முழு அர்ப்பணிப்புடன் பயன்படுத்தித் தங்கள் வணிகத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வீரப்பன் கேட்டுக்கொண்டார்.








