வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பரப்பும் இறுதி நேர அவதூறுகளையும் வெற்று விமர்சனங்களையும் நம்பி வாக்காளர்கள் ஏமாற வேண்டாம் என்று பிகேஆர் தேசியத் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் எச்சரித்துள்ளார்.
ஜுவாசே சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் ஆடில் அப்துல்லாவை ஆதரித்து நடைபெற்ற ‘ஜாலினான் காசி’ பூர்வகுடி மக்கள் சந்திப்பு நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் நெருங்கும் வேளையில் அவதூறு தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும். மக்கள் வெறும் வதந்திகளுக்கு ஆட்படாமல், உண்மைத் தரவுகள், சாதனைகள் மற்றும் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தங்களின் வாக்குகளைச் செலுத்த வேண்டும்," என்றார்.
தற்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து தடையின்றித் தொடர, வாக்காளர்கள் தங்களின் பேராதரவை வழங்க வேண்டும் என்றும்; இறுதி முடிவு வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் நூருல் இசா திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.








