கோலாலம்பூர், ஏப்ரல்.29-
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருனுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்ட நிலையில், இது அந்தப் கட்சிக்கு தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ரஃபிஸி, அம்னோவின் இந்த நடவடிக்கை, கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஏன் அக்கட்சியைப் புறக்கணித்தார்கள் என்பதை மீண்டும் நினைவுபடுத்துவதாகக் கூறியுள்ளார். கட்சி பலத்தை உறுதிப்படுத்த அம்னோ எடுக்கும் இத்தகைய முடிவுகள், சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களிடையே தவறான தோற்றத்தை உருவாக்கிவிடும் எனவும், குறிப்பாக நடுநிலை வாக்காளர்களின் எண்ணத்தை மாற்றுவது இனி கடினம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளரை நீக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில், மந்திரி புசார் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.








