கோத்தா கினபாலு, டிசம்பர்.30-
லாமாக் இடைத்தேர்தலில், சபா பாரிசான் நேசனல் சார்பில் போட்டியிட, இளைஞர் சமூக செயற்பாட்டாளர் முஹமட் இஸ்மாயில் அயோப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் டத்தோ ஜஃப்ரி அரிஃபின் இன்று அறிவித்துள்ளார்.
மிஹா என்றழைக்கப்படும் 45 வயதான முஹமட் இஸ்மாயில் அயோப், சபா பாரிசானின் நேரடி வேட்பாளர் என்றும் ஜஃப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், பாரிசான் நேஷனல் சார்பில் மறைந்த டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினின் மகன் நாயிம் குர்னியாவான் போட்டியிடவுள்ளதாக ஜஃப்ரி கடந்த வாரம் அறிவித்தார்.
வேட்பாளர்களின் தேர்வானது, GRS உடனான பேச்சு வார்த்தைகள் மற்றும் ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே எடுக்கப்பட்டதாகவும் ஜஃப்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதையடுத்து, அவரது தொகுதியான கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் ஜனவரி 24-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








