அலோர் ஸ்டார், செப்டம்பர்.15-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளின் வேட்பாளர்களும் பெரிக்காத்தான் நேஷனலைக் குறிக்கும் பிஎன் சின்னத்தைப் பயன்படுத்துவர் என்று தாம் எதிர்பார்ப்பதாக அந்த கூட்டணியின் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தை அனைத்து வேட்பாளர்களும் பயன்படுத்துவது மூலம் தேர்தல் பணிகள் சுமூமாக நடைபெறும் என்பதுடன் தேவையற்ற பிரச்னை எழுவது தவிர்க்கப்படும். அத்துடன் செலவினமும் குறையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சியான பாஸ், கடந்த பொதுத் தேர்தலில் கிளந்தான், திரெங்கானு முதலிய மாநிலங்களில் பாஸ் சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட்டது.
எனினும் வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது தம்முடைய சொந்த கருத்து என்ற போதிலும் பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் பிரதமருமான டான் ஶ்ரீ முகைதீன் குறிப்பிட்டார்.