நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சியானது பெயருக்கு போட்டியிடுவதற்காக களமிறங்கவில்லை என்றும், வெற்றி பெறும் இலக்குடன் தான் தேர்தலை சந்திக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
சிகாமத் சட்டமன்றத் தொகுதியில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில்தான் போட்டியிடுகிறது. நாங்களும் அதற்காகத்தான் களமிறங்கியுள்ளோம். எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அம்னோ துணைத் தலைவர் காலிட் நோர்டின் கூறிய கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ள முகைதீன், அனுபவம் மிக்க மூத்த அரசியல்வாதியான காலிட் நோர்டின், அமைச்சராக நீண்டகால அனுபவமும் பெற்றவர். ஆனால், அவர் கூறிய கருத்து சிறு குழந்தை பேசுவது போல உள்ளது என்றும் சாடியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகோல்-இல் நடைபெற்ற பாரிசான் நேசனல் தேர்தல் இயந்திரத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய காலிட் நோர்டின், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து வெறும் பெயரளவில் மூக்கை நுழைக்கும் கட்சியாக மட்டுமே உள்ளது என்றும், அந்தக் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத வகையில் வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள முகைதீன், பெர்சத்து கட்சியானது தேர்தலில் வெற்றி பெறும் உறுதியுடனும் தீவிரத்துடனும் களமிறங்கியுள்ளதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.








