கோலாலம்பூர், ஜூன்.07-
ஜசெக கட்சியுடன் ஒரே மேசையில் அமர்வதை விட மந்திரி பெசார் பதவியைத் துறப்பேன் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி கூறிய கருத்துக்கு ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஜசெக உடன் ஒரே மேசையில் அமர விரும்பவில்லையா? அந்த அகந்தையுடனே தொடருங்கள் என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜசெக தலைவர்களுடன் ஒரே மேசையில் அமர்வதையும் சுட்டிக் காட்டியுள்ள அந்தோணி லோக், ஸாஹிட் ஹாமிடியுடன் தாம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ஓன் ஹாஃபிஸ் மற்றும் அந்தோணி லோக் இடையிலான இந்த விவாதம், ஜோகூர் அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








