ஜோகூர் பாரு, மே.18-
பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லியும் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் பிகேஆர் கட்சியுடன் செய்து கொண்ட 10 மில்லியன் ரிங்கிட்டுக்கான பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் கட்சியை விட்டு விலகுவதற்கு முன்பே சில நடவடிக்கைகளை எடுத்ததற்கான ஆதாரங்கள் கட்சியிடம் இருப்பதாகவும் பிகேஆர் பொதுச் செயலாளர் ஃபுஸியா சாலே தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அவர்கள் கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பதால், அந்த 10 மில்லியன் ரிங்கிட் பிணை நிபந்தனைகள் இன்னும் பொருந்தும் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் இருவரும் கட்சித் தாவல் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்று கூறினாலும், கடந்த மே 17-ஆம் தேதியே Parti Bersama Malaysia கட்சியில் சேர்ந்து விட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரமானது கட்சியின் சட்டக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி ஆகிய இருவரும் நேற்று பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








