கோலாலம்பூர், பிப்ரவரி.23-
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என்று மக்களவை துணை சபாநாயகர் டத்தோ ரம்லி முகமட் நோர் தெரிவித்தார்.
இன்று மக்களவையில் இப்பிரச்சினையை எழுப்பிய ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர், ஹம்ஸா ஸைனுடின் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அவர் நீடிப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற நிலையில் கட்டளை 4A பிரிவின் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் சர்ச்சை எழுந்தால், அது குறித்து சபாநாயகரே இறுதி முடிவெடுப்பார் என்பதை ராயர் சுட்டிக் காட்டினார்.
பெர்சத்து கட்சியில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தமக்கு முதலாவது எதிரி என்று ஹம்ஸா ஸைனுடின் அறிவித்துக் கொண்டதாகக் கூறப்படுவதையும் ராயர் சுட்டிக் காட்டி, இது குறித்து சபாநாயகர் அலுவலகத்திற்கு ஏதேனும் அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளதா எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த துணை சபாநாயகர் ரம்லி முகமட் நோர், ஹம்ஸா ஸைனுடினின் பதவி மாற்றம் தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்திற்கு இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ கடிதமோ அல்லது ஆவணமோ வரவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
தற்போதைய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாத வரை ஹம்ஸா ஸைனுடின் அந்தப் பதவியில் நீடிப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.








