சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், அது அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமையக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டரசுப் பிரதேச பொதுமன்னிப்பு வாரியம் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி கூடவுள்ளதாகவும், 1எம்டிபி ஊழல் தொடர்பான தண்டனைகளுக்காக நஜிப் அளித்துள்ள மன்னிப்பு கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசியல் ஆய்வாளர்களான அஸ்மி ஹசான், மஸ்லான் அலி மற்றும் தௌஃபிக் யாக்கோப் ஆகியோர் கூறுகையில், நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கப்படுவது, குறிப்பாக அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாக நம்பும் அம்னோ அடிமட்ட ஆதரவாளர்களின் உற்சாகத்தை அதிகரிக்கக்கூடும்.
அதேவேளையில், இது பாரிசான் நேஷனல் தனது கட்சியின் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பின்னடைவாகவும் அமையலாம் என எச்சரித்துள்ளனர்.
நஜிப்புக்கு எதிரான பிற வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதும் பாரிசான் நேஷனலுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என மஸ்லான் அலி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பக்காத்தான் ஹராப்பான் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் 1எம்டிபி ஊழலை முன்னிலைப்படுத்தி பாரிசான் நேஷனலை விமர்சிக்கக்கூடும் என்றும், குறிப்பாக நகர்ப்புற மற்றும் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் மற்றும் முடிவு எடுக்காத வாக்காளர்களின் ஆதரவை பாரிசான் நேஷனல் இழக்க நேரிடலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் பக்காத்தான் ஹராப்பானுக்கு அரசியல் பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, நஜிப் மீண்டும் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெறுவது மலாக்கா தேர்தலிலும் அடுத்த பொதுத் தேர்தலிலும் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனலை எதிர்கொள்வதில் கூடுதல் சவாலை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.








