கோலாலம்பூர், டிசம்பர்.14-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவை மாற்றத்தை விரைவில் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான அமைச்சர்கள் பெயர்களை இன்னும் அவரிடம் இருந்து தாம் கேட்கவில்லை என அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார். எனினும், இந்தக் அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அமைச்சுக்களில் உள்ள சில இடங்களை நிரப்புவது மட்டுமே இருக்குமே தவிர, பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.
அதே வேளையில், IPF Malaysia 33 ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அவர், தேசிய முன்னணியில் இருந்து விலகிச் செல்ல முடிவு செய்யும் எந்தவோர் உறுப்புக் கட்சியும் தங்கள் முடிவுக்கு வருத்தப்படக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அவ்வாறு வெளியேறினால், தேசிய முன்னணிக்குத் திரும்புவதற்கு எந்த வழியும் இல்லை என்றும், இஃது உங்களைப் பலி கொடுக்கும் முடிவாக மாறும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 16வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் 24 மாதங்களே உள்ள நிலையில், நாட்டின் அரசியல் சூழல் மாறும் எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால், உருவாகும் அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப முடிவெடுக்கத் தவறி, தொக்கி நிற்கும் நிலை' ஏற்பட்டால் வருந்த வேண்டாம் என்றும் அவர் அரசியல் கட்சிகளை எச்சரித்தார். இதுவரை ம.இ.கா. தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக எந்தவித அதிகாரப்பூர்வக் கடிதமோ அல்லது தீர்மானமோ சமர்ப்பிக்கவில்லை என்றும், அவ்வாறு அவர்கள் முடிவெடுக்காவிட்டால் தேசிய முன்னணி ஒரு முடிவை எடுக்கும் என்றும் ஸாஹிட் ஹமிடி விளக்கினார்.








