உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சும்பங்கான் அசாஸ் ரஹ்மா என்ற சாரா உதவித்தொகைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று ஜெலுபு, சென்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் ஹார்முஸ் நீரிணைப் பகுதியின் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலரிலிருந்து 90 டாலராக உயர்ந்துள்ளது.
இந்த போக்குவரத்து இடையூறுகளால் விவசாயத்திற்கான உர இறக்குமதிச் செலவு, கப்பல் சரக்குக் கட்டணம் மற்றும் காப்புறுதி தொகைகள் அதிகரித்துள்ளன. இதுவே மலேசியாவில் உள்நாட்டுப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும் என்று பிரதமர் விளக்கினார்.
தற்போது 'சாரா' திட்டத்திற்கு அரசாங்கம் 16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருந்தாலும், மக்களின் அன்றாடச் சிரமங்களைக் களைய இது போதுமானதல்ல என்பதைப் பிரதமர் ஒப்புக்கொண்டார். நாட்டின் அமைதியும் பொருளாதாரமும் தொடர்ந்து சீராக இருக்கும் பட்சத்தில், வரும் 2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இதற்கான நிதி நிச்சயம் உயர்த்தப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.








