அம்னோ கட்சியில் மீண்டும் இணைய விரும்பும் அனைவருக்கும் அதன் கதவுகள் திறந்தே உள்ளதாக அதன் உச்ச மன்ற உறுப்பினரும் உயர்கல்வி அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் உள்ளிட்ட தலைவர்களும் கட்சிக்கு திரும்ப விரும்பினால் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் மீண்டும் கட்சியில் இணைய எடுத்து முயற்சியை ஜம்ரி வரவேற்றுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர் தொடர்ந்து அம்னோவுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட, அம்னோ பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியைச் சந்தித்த கைரி ஜமாலுடின் கட்சியில் மீண்டும் இணையும் முறையீட்டு கடிதத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








