அம்பாங் ஜாயாவில் உள்ள MPAJ கோபுரக் கட்டிடத்தின் 5-ஆம் தள அரங்கில், இந்திய சமூகத்திற்கான தொழில் முனைவோர் நிதி திட்டமான SPUMI குறித்த விளக்கக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 140 தொழில் முனைவோரும், புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியானது, தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் முன்னெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகும்.
இந்திய சமுதாயத்தினரின் தொழில் வளர்ச்சிக்கு நிதி வாய்ப்புகளையும், அதிக அணுகலையும் வழங்குவது இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் MPAJ துணைத் தலைவர் டி.எஸ். ஹாஜி ஹஸ்ரோல்நிஜாம் ஷாரி, தேரத்தாய் சட்டமன்ற உறுப்பினர் யூ ஜியா ஹார், லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சையத் அகமது அப்துல் ரஹ்மான், சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழுவின் தொடர்பு அதிகாரி மோகன்ராஜ் மற்றும் தேரத்தாய் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூக தலைவர் சரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த SPUMI திட்ட விளக்கக் கூட்டம், சிலாங்கூர் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள தொழில் முனைவோரை மேம்படுத்தும் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகும்.
இந்த தொடர் நிகழ்ச்சியின் முதல் இடமாக அம்பாங் ஜாயா தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், உள்ளூர் தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் நிதி திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சி முயற்சிகள் குறித்து நேரடியாக தகவல் பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.













