இந்திய சமுதாயத்திற்குத் தொழில் நிதி வாய்ப்புகளை அதிகரிக்க அரசாங்கம் சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில் இந்திய சமுதாயத்தினருக்கான தொழில் முனைவோர் நிதி திட்டமான SPUMI குறித்த விளக்கக் கூட்டம் நேற்று அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 140 தொழில் முனைவோரும், புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோரும் கலந்து கொண்டனர்.
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் முன்னெடுக்கும் முயற்சிகளில் அது ஒரு பகுதியாகும்.
சிலாங்கூர் முழுவதும் நடைபெறவுள்ள இந்த தொடர் நிகழ்ச்சியின் முதல் இடமாக அம்பாங் ஜாயா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர் நிகழ்ச்சி, உள்ளூர் தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் நிதி திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சி முயற்சிகள் குறித்து நேரடியாக தகவல் பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் MPAJ துணைத் தலைவர் டிஎஸ். ஹாஜி ஹஸ்ரோல்நிஜாம் ஷாரி, தெரதாய் சட்டமன்ற உறுப்பினர் யீவ் ஜியா ஹாவ், லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சையத் அகமது சையத் அப்துல் ரகுமான், சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழுவின் தொடர்பு அதிகாரி மோகன்ராஜ், தெரதாய் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூக தலைவர் சரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.













