மஞ்சோங், ஏப்ரல்.05-
16-ஆவது பொதுத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமல், மக்களின் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளதை அம்னோ வரவேற்றுள்ளது. பேரா, மங்சோங் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி டுசுகி, உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சூழலில், அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்காமல், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பன்னாட்டு அரசியல் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்து வருவது மக்களின் அன்றாடச் செலவுகளைப் பாதித்துள்ள நிலையில், தேர்தலை விடவும் மக்களின் நலனே தற்போதைய முக்கியத் தேவை என அவர் சுட்டிக் காட்டினார். அன்வாரின் இந்த அணுகுமுறை பொறுப்புணர்வுடன் கூடியது என்றும், பாரிசான் நேஷனல் எப்போதும் மக்களின் நலனுக்கே முதலிடம் கொடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.








