உலு சிலாங்கூர், ஜனவரி.03-
நாட்டின் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் மலேசியாவின் இன அடிப்படையிலான அரசியல் ஒரு பெரிய சவாலாக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஒப்புக் கொண்டார்.
அரசியல் நோக்கத்திற்காக இன மற்றும் மத உணர்வுகள் தூண்டப்படுவதால், அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டங்கள் முடக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள் அல்லது இந்தியர்கள் என ஒவ்வொரு இனமும் தங்களுக்குரிய பிரச்சனைகளை மட்டுமே முன்னிறுத்துவது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்று அவர் எச்சரித்தார்.
எந்தவொரு விவகாரத்தையும் ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிரச்சனையாகப் பார்க்காமல், அவற்றை ஒட்டுமொத்த மலேசியாவின் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
இன்று உலு சிலாங்கூரில் பிகேஆர் கட்சியின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அக்கட்சியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் மற்றும் பி.கே.ஆர் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் 222 இடங்களில் அறுதிப் பெரும்பான்மை முழுமையாக இல்லை என்பதை நினைவூட்டிய பிரதமர், 82 இடங்களை மட்டுமே கொண்டுள்ள நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் என்று விளக்கினார்.
ஆட்சியில் இருந்த போது எவ்வித சீர்திருத்தங்களையும் செய்யாதவர்கள், இப்போது பதவி இழந்த பிறகு அரசாங்கத்தைக் குறைகூறுவதில் மட்டுமே குறியாக உள்ளனர் என்று எதிர்க்கட்சிகளை அவர் சாடினார்.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆணவம் ஆகியவற்றை ஒழிப்பதில் தமது அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், அதிகாரத்தில் இருக்கும் போதே மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.








