நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிற கட்சிகளைச் சார்ந்து இருக்காமல், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மட்டுமே தனித்து ஒரு வலுவான, நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால், வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 23 தொகுதிகளில் வெற்றி பெறுவதே தங்களின் பிரதான இலக்கு என ரெப்பா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் எஸ். வீரப்பன் தெரிவித்துள்ளார்.

ரெப்பா சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்வதற்காக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஐந்தாவது முறையாகக் களம் காணும் வீரப்பன், கடந்த 2023-ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டத்தட்ட 6,000 வாக்குகள் பெரும் வித்தியாசத்தில் இத்தொகுதியைத் தற்காத்துக்கொண்டவர்.

தேர்தல் குறித்து மேலும் பேசிய வீரப்பன், "இந்த மாநிலத் தேர்தல் என்பது நாம் விரும்பி எடுத்த முடிவு அல்ல. ஒரு நிலையில்லாத அரசாங்கத்தினால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளையும் நீண்டகால எதிர்பார்ப்புகளையும் ஒருபோதும் பூர்த்தி செய்ய முடியாது. பல அரசியல் சவால்களுக்கு மத்தியில், மாநிலத்தில் மீண்டும் பக்காத்தான் ஹராப்பானின் மக்கள்நல ஆட்சித் தொடரப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் இத்தேர்தலை எதிர்கொள்கிறோம். இது காலத்தின் கட்டாயமாகும்" என்று வீரப்பன் மிகவும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து, பெரும்பான்மை பலத்துடன் ஒரு வலுவான அரசாங்கத்தை நிறுவுவதன் மூலமே, கூட்டணி வெளியிட்டுள்ள 10 அம்ச முற்போக்கான தேர்தல் கொள்கை அறிக்கையை எவ்விதத் தொய்வுமின்றியும் முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்று ரெப்பா சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் கோ கிம் ஸ்வீயுடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள வீரப்பன் தெரிவித்தார்.









