Jun 12, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி, நிக் நஸ்மியின் உறுப்பினர் பதவி தானாகவே இரத்து செய்யப்படும் - பிகேஆர் அறிவிப்பு
அரசியல்

ரஃபிஸி, நிக் நஸ்மியின் உறுப்பினர் பதவி தானாகவே இரத்து செய்யப்படும் - பிகேஆர் அறிவிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.17-

பிகேஆர் கட்சியை விட்டு விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ராஜினாமா செய்வதாக அறிவித்த அக்கட்சி உறுப்பினர்கள், டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோரின் உறுப்பினர் பதவி தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிகேஆர் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சாலே இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறி தங்களது நாடாளுமன்றத் தொகுதிகளையும் காலி செய்வதாக அறிவித்த உரைகளின் பதிவுகள் கட்சிக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிகேஆர் கட்சியின் அரசியல் சட்டம் பிரிவு 9(1)(c) அடிப்படையில், இவ்வாறு அறிவித்ததன் மூலம் அவர்களின் உறுப்பினர் பதவி தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலேசிய கூட்டாட்சி அரசியல் சட்டத்தின் கட்டுரை 49A (1)(a)(ii) பிரிவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாமல் போனால், அவரது நாடாளுமன்றத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஃபுஸியா சாலே விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சரவையிலிருந்து விலகி ஓராண்டு கடந்த நிலையில், ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும், இன்று மலேசிய ஐக்கியக் கட்சி எனப்படும் MUP-யை தங்களது புதிய அரசியல் தளமாக ஏற்றபதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News