நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் சூடுப்பிடித்துள்ள வேளையில் சுவா தொகுதியை தற்காத்துக்கொள்வவதற்கு பிகேஆர் சார்பில் மீண்டும் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ இயூ பூன் லியூ, இனம், மதம், பின்னணிப்பாராமல் அனைத்து இன மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்ற உறுதிப்பூண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அனைத்து இன மக்களுக்கும் சமமான அளவில் சேவையாற்றியிருப்பதை டத்தோ இயூ பூன் லியூ, நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சுவா தொகுதியில் இந்தியர்களின் சமூகவியல் நலன் சார்ந்த அம்சங்களுக்கு தாம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

இதில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இந்து கோயில்கள் அடங்கும். சுவா தொகுதியில் உள்ள 2 தமிழ்ப்பள்ளிகளான முகுந்தன் தமிழ்ப்பள்ளி மற்றும் தானாமேரா தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு தாம் தொடர்ந்து கவனம் செலுத்தி தேவையான உதவிகளை நல்கி, தரத்தை உயர்த்தியிருப்பதாக டத்தோ இயூ பூன் லியூ தெரிவித்தார்.

குறிப்பாக, அடிக்கடி வெள்ளப்பிரச்னையை எதிர்நோக்கி வந்த முகுந்தன் தமிழ்ப்பள்ளிக்கு கால்வாய் முறை சீர்படுத்தப்பட்டதன் காரணமாக வெள்ளப்பிரச்னைக்கு முடிவு காணப்பபட்டது. அதேவேளையில் மிக மோசமான சூழ்நிலையில் இருந்த பள்ளிக்கு செல்லும் சாலை தார் சாலையாக செப்பனிடப்பட்டு இருப்பதை திசைகளுக்கு அளித்த பேட்டியில் டத்தோ இயூ பூன் லியூ விவரித்தார்.
பள்ளி நிர்வாகங்களுடன் நல்லதொரு தொடர்பை அளித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும், தாம், தொகுதிகளில் உள்ள இந்தியர்களின் நலன் தொடர்ந்து பேணப்படும் என்பதை இதன் வாயிலாக உறுதிகூறுவதாக டத்தோ இயூ பூன் லியூ தெரிவித்தார். வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் சுவா தொகுதியில் டத்தோ இயூ பூன் லியூ, இரு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். கடந்த 2023 தேர்தலில் அவர் 6,298 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








