முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உட்பட முன்னாள் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அம்னோவில் இணைய விரும்பினால், கட்சி அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
கட்சியில் மீண்டும் இணைய விரும்பும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும், அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கட்சியின் உயர்மட்ட தலைமைத்துவத்தால் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கட்சி தற்போது “மன்னிப்போம், மறப்போம்” அணுகுமுறையை பின்பற்றி வருவதாகவும் அகமட் மஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் அம்னோ தலைவருமான மகாதீர், மீண்டும் அம்னோவில் இணைய விண்ணப்பித்தால், அது உச்ச மன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








