கோலாலம்பூர், நவ. 18-
கெராக்கான் கட்சி கோரியிருப்பதைப் போன்று மலாய்க்காரர் அல்லாதோருக்கான பிரகடனத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமில்லை என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த நிழலைக் கண்டு கெராக்கான் பயப்பட வேண்டியதில்லை என்பதுடன் பாஸ் கட்சியை குறைகூற வேண்டியதில்லை.
குறிப்பாக, பாஸ் கட்சியினால் சீன சமூகத்தின் ஆதரவை இழந்து விடுவோமோ என்று கெராக்கான் அச்சப்பட வேண்டியதில்லை என்று துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
தவிர பாஸ் கட்சி, இந்நாட்டிற்கு புதியது அல்ல. நாட்டில் பழமை வாய்ந்த அரசியல் கட்சிகளில் பாஸ்ஸும் ஒன்றாகும். மத்திய அரசாங்கத்தில் ஒரு கூட்டுக்கட்சியாக அங்கம் பெற்று இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை தேர்வு செய்வதற்கு சமூக நெருக்குதலை குறைக்கும் முயற்சியில் அக்கூட்டணி மலாய்க்காரர்கள் அல்லாதோருக்கான பிரகடனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அதன் உறுப்புக்கட்சியான கெராக்கான் விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிர்வினையாற்றுகையில் துவான் இப்ராஹிம் மேற்கண்டவாறு கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனலில் பாஸ் கட்சி மலாய்க்காரர் சார்ந்த மிகப்பெரிய கட்சியாக நாடளுமன்றத்தில் அ திக தொகுதிகளை கொண்டிருப்பதால் தற்போது மலாய்க்கார இஸ்லாமியர்கள் அல்லாத தரப்பினருள் சிலர் பதற்றம் கொண்டுள்ளனர் என்று கெராக்கான் கட்சி மாநாட்டில் அதன் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் கருத்துரைத்து இருப்பது குறித்து துவான் இப்ராஹிம் கருத்துரைத்தார்.








