சிரம்பான், ஏப்ரல்.29-
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் காலியாக உள்ள நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்புவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.
அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி புசாருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் வசம் இருந்த நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளும் தற்போது காலியாகியுள்ளன.
மாநில ஆட்சியாளரின் அறிவுறுத்தலின்படி, தற்போது சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தி வரும் அமினுடின், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க காலியாக உள்ள இடங்களுக்கான தற்காலிகப் பொறுப்புகள் அல்லது புதிய நியமனங்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமினுடின் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.








