ஜெம்போல், ஆகஸ்ட்.01-
ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் கோ. மணிவண்ணன், வாக்குச் சாவடிக்குள் எதிர்த்தரப்புக் கட்சியின் பிரச்சாரப் பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இன்று ரொம்பின் தேசியப் பள்ளியின் வாக்குச் சாவடியின் 5-ஆவது தடத்தில் மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்ட போது இச்சம்பவத்தைக் கண்டறிந்தார். சில வாக்காளர்கள் நீல நிறக் காகிதங்களை வாக்குப்ம்பதிவு அறைக்குள் கொண்டு வந்ததையும், அங்கிருந்த தேர்தல் அதிகாரியின் மேசை மீது அதை வைத்ததையும் அவர் கவனித்தார்.
விசாரணையில், அந்த நீல நிறக் காகிதத்தில் "பாரிசான் நேஷனலுக்கு வாக்களியுங்கள்" என்ற வாசகமும், பாரிசான் நேஷனல் சின்னமும் இடம் பெற்றிருந்தது தெரிய வந்தது. இச்செயல் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என்று சுட்டிக் காட்டிய மணிவண்ணன், தேர்தல் செயல்முறையின் நேர்மையைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.








