ஊழலை முற்றிலுமாக நிராகரித்து, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் நேர்மையான தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தொடர்புத்துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ பாமி பட்சில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெகிரி செம்பிலானில் நடைபெற்ற 'ஜெலாஜா கெக்கால் ஹரப்பான்' தேர்தல் பிரச்சார நிகழ்வில் பேசியடத்தோ ஸ்ரீ பாமி, "தற்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் தலைமையிலான நிர்வாகம் ஊழலற்ற நேர்மைக்கு மிகச்சிறந்த உதாரணம். இவரது ஆட்சியில் மாநிலத்தின் முதலீட்டு வருவாய் அதிகரித்துள்ளதோடு, ஜகாத் மற்றும் பைத்துல்மால் நிதியும் உயர்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் மக்கள் இவரது ஆட்சிக்கு 10- க்கு 9.5 வரை நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். எனவே, மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைத் தக்கவைப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை," என்றார்.
தொடர்ந்து பேசிய டத்தோ ஸ்ரீ பாமி, நிர்வாகச் சீர்கேட்டால் அழியும் நிலைக்குச் சென்ற 'தாபோங் ஹாஜி' விவகாரத்தின் அரச விசாரணை ஆணைய அறிக்கையைப் பொதுமக்களுக்குப் பகிரங்கமாக வெளியிடப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்ததே இந்த அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மைக்குச் சான்றாகும் என்றார்.
மக்கள் பணத்தைச் சூறையாடி, நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், யா யாசான் நெகிரி செம்பிலான் மூலம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் உட்படப் பல உதவிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி வழங்கப்படும் என்றும் டத்தோ ஸ்ரீ பாமி உறுதியளித்தார்.








