அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு, 'முழுமையான' முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதனை ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடனான தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் போர் பதற்ற நிலையைத் தொடர்ந்து, ஏற்பட்டுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீது நடத்தப்பட்ட 'சட்டவிரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற' தாக்குதல்களைக் கண்டிப்பதில் மலேசிய அரசாங்கமும் மக்களும் கடைப்பிடித்த 'மதிப்புமிக்க' கொள்கை நிலைப்பாட்டை பெசெஷ்கியன் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை, மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
பொதுமக்களை குறிவைக்கும் எந்தச் செயல்பாடும் சர்வதேச சட்டத்திற்கான வெளிப்படையான மீறல் எனவும் வலியுறுத்துகிறது.
இந்நிலையில், மூத்த தலைவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்காக ஈரானுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், நிபந்தனையின் பேரில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதை அன்வார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளையில், அமைதி முயற்சிகளானது, நீதி, பொறுப்புடைமை மற்றும் தொடர் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








