கோலாலம்பூர், பிப்ரவரி.26-
வரும் 16-வது பொதுத் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் அது கட்சியின் சின்னத்தில் இருக்காது என்றும் தெரிவித்த கருத்திற்காக, பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கு அக்கட்சி காரணம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது.
தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில், இந்தக் கடிதத்தைக் கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சாலே அனுப்பியுள்ளதாக ரஃபிஸி தெரிவித்துள்ளார்.
தற்போது பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரஃபிஸி, தனது கருத்திற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். தாம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு தனது வருங்காலத் திட்டம் என்ன என்பதைப் பற்றியே பேசியதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, நான் கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு கட்டுப்பட்டவன் அல்ல. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போது எத்தகைய முடிவை எடுப்பது என்பது எனது விருப்பமாகும் என அவர் தெளிவுபடுத்தினார்.








