மலேசியாவில் வாழும் பல்வேறு இனத்தவர்கள் தங்களது பூர்வீக நாடுகளுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநரும், கெடா மந்திரி பெசாருமான சனுசி நோர் தெரிவித்த கருத்துக்கு எதிராக மசீச கட்சியானது மௌனம் காப்பது ஏன் என்று கம்பார் தொகுதி ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சீ மின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சனூசியின் கருத்து மலாய்க்காரர் அல்லாத சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பாரிசானும்,பெரிக்காத்தானும் கூட்டணி அமைத்திருந்த போதிலும், சனூசியின் கருத்தை மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கண்டித்திருக்கிறார் என்பதையும் சோங் சீ மின் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால், மசீச தலைவர் வீ கா சியோங்-கோ, அக்கட்சியின் பிற தலைவர்களோ இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சனுசி நோர் , தானா மலாயு மட்டுமே மலாய்க்காரர்களின் தாயகம் என்றும், பிற இனத்தவர்களுக்கு அவர்களின் பூர்வீக நாடுகள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அவரது கருத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சோங் சீ மின் வலியுறுத்தியுள்ளார்.








